புத்ராஜெயா, ஆக.1-
வடிவமைக்கப்படும் தொழில்நுட்ப மேம்பாடானது 4.0 தொழில்துறை புரட்சிக்கு ஏற்ப அமைந்திருப்பதோடு சமூகத்திற்கு தொடர்புடையதாக இருப்பதும் அவசியமாகும். அடிப்படை தொழில்நுட்பத்தோடு தொடர்பு கொள்வது மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தோல்வி காணுமேயானால் விவேக மாநிலம் என்ற அமைப்பின் நோக்கம் அர்த்தம் இல்லாமல் போகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
விவேக மாநிலம் அல்லது நகரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மனிதர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான தொடர்பு முக்கிய பங்காற்றுகிறது என்றார் அவர்.
“விவேக மாநிலம் என்றழைக்கப்படும் சில நாடுகளுக்கு நான் சென்றுள்ளேன். அப்போது அங்குள்ள மக்களிடம் நான் கேட்டபோது, அவர்களுக்கு அது குறித்து எதுவும் தெரியவில்லை.”
“தொழில்நுட்பத்தை நாம் வேகமாகத் துரத்திக் கொண்டிருக்கும்போது, அந்த மாற்றத்திற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்வது பெரும் சவாலாக இருக்கிறது” என்றார் அவர்.