கோலாலம்பூர், செப்.6-
பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு எதிர்காலத்தில் கூடுதல் வருமானம் தரக்கூடிய வகையில் டூரியான் மரங்கள் நடுவதற்கான நிலங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்துறை அமைச்சும் பொருளாதார விவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெல்டா பகுதியில் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண்பது குறித்த ஆய்வில் இரு அமைச்சுகளும் ஈடுபட்டுள்ளதாக விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்துறை அமைச்சர் டத்தோ சாலாஹீடின் ஆயுப் கூறினார்.
“மலைப் பகுதிகளில் டூரியான் மர நடுவுக்குப் பொருத்தமான இடங்கள் தேடப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.
செம்பனை எண்ணெய் விவகாரம் இறுக்கமாகி வரும் வேளையில், விரைவில் லாபம் அளிக்கக்கூடிய தாவரம் அல்லது மரங்களை நடுவது பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் என்பதால், பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை அடையாளம் காண்பதில் இரு அமைச்சுகளும் ஒத்துழைப்பது அவசியமாகும் என்றும் அவர் சொன்னார்.