கோத்தா கினபாலு, செப்.18-
ஐக்கிய நாட்டு அமைப்பின் அறிக்கையானது 2016ஆம் ஆண்டு மலேசிய மக்களில் 15 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள வேளையில், தேசிய புள்ளி விவரப் பட்டியலோ நாட்டின் வறுமை நிலை 0.4 விழுக்காடு என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, நாட்டில் வறுமை நிலையை கணக்கிடுவதற்கு புதிய வழிமுறை கையாளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
நாட்டின் வறுமை நிலையை துல்லிதமாகக் கணக்கிடக்கூடிய வழிமுறையை கண்டறிவது அவசியம் என்று கெஅடிலான் கட்சி தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“மலேசியாவின் பல கிராமங்களில் மற்றும் பெல்டா தோட்டப் பகுதியில் குறைந்த வருமானம் பெறுகின்ற பலரைக் காணும்போது, அரசாங்கம் குறிப்பிடுவது போல், 0.4 விழுக்காட்டினரைக் காட்டிலும் மேலும் அதிகமானோர் வறுமை நிலையில் இருக்கின்றனர் என்பது தெரிகிறது” என்றார் அவர்.
நமது நாட்டில் அதிகமான மக்கள் வறுமையில் உழல்கின்றனர் என்று ஐ.நாவின் மனித உரிமை அறிக்கையில் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ள கருத்து உண்மையானதாக இருக்கலாம் என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.