ஈப்போ, செப்.20-
புகைமூட்டம் காரணமாக சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் (எல்டிஎஸ்ஏஎஸ்) இருந்து பயணிக்க பட்டியலிடப்பட்ட அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன. ஏர் ஆசியாவின் சிங்கப்பூர் – ஈப்போ – ஜோகூர் பாரு விமானப் பயணம், மலிண்டோ நிறுவனத்தின் ஈப்போ-ஜோகூர் பாரு-ஈப்போ விமானப் பயணம், சிங்கப்பூரின் மலிவுவிலை விமான நிறுவனமான ஃப்ளைஸ்கூட் நிறுவனத்தின் சிங்கப்பூர்-ஈப்போ-சிங்கப்பூர் ஆகிய விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட பயணங்களில் அடங்கும் என்று எல்டிஎஸ்ஏஎஸ் நிர்வாகி முகமது அலி ஓஸ்மான் கூறினார்.
புகைமூட்டம் மோசமடைந்ததால், சிங்கப்பூர், ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கவிருந்த 12 பயணங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் அவர் சொன்னார்.
வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு காற்று தூய்மைக்கேடு மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து இரண்டு விமானப் பயணங்கள் முதலில் ரத்து செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.