SELANGOR

பெண்களுக்கான கைவினை ஆபரணங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சி !!!

ஜெராம், செப்டம்பர் 1:

கைத்தொழிலை கற்றிருந்தால் வாழ்க்கையில் கவலை இல்லை என்பது பழமொழி.வீட்டிலிருந்தபடியே கைத்தொழில் கற்றுக்கொண்டு பெண்களும் தங்களது குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறந்த பங்காற்ற முடியும். அதன் அடிப்படையில்  பெண்களுக்கான கைவினை ஆபரணங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை மிகச் சிறப்பான முறையில் ஜெராம் தாமான் ஜாத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறை சிலாங்கூர் மாநில திறன் மற்றும் புத்தாக்க கழகம் (Persatuan Kemahiran & Inovasi Selangor), ஜெராம் சட்டமன்ற திறன்மிக்க மகளிர் மையம் (Pusat Wanita Berdaya Dun Jeram) ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் குறைந்த வருமான வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள் ஏறக்குறைய 35 பேர் கலந்துகொண்டு பலன் அடைந்தனர்.
இந்நிகழ்வினை சிலாங்கூர் இன்று நாளிதழின் தலைமையாசிரியர் மதிப்புமிகு குணசேகரன் குப்பன் அவர்கள் அதிகாரபூர்வமாக திறப்புரையாற்றி துவங்கி வைத்தார்.

மேலும் இப்பட்டறைக்கு ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முகமது சைட் பின் ரோஸ்லி அவர்கள் சிறப்பு வருகை புரிந்து பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
அவர் தமதுரையில் இந்திய சமுதாயத்திற்கு இம்மாதிரியான பயிற்சி பட்டறைகளின்வழி வருமானத்தை பெருக்கி கொள்ள வாய்ப்புகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு தனது பிளவுபடாத ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்தார்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திருவாளர் மாதவன் முனியாண்டி, பயிற்சி பட்டறை ஏற்பாட்டில் பங்கெடுத்துக்கொண்ட ஜெராம் இந்திய சமூக பொதுநல ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அருள்மாறனுக்கு தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.


Pengarang :