கோலாலம்பூர், நவ.18-
1எம்டிபி மீதான கணக்காய்வு அறிக்கையில் அதன் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தாவுடன் சேர்ந்து சில திருத்தங்கள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நஜிப் துன் ரசாக், அதன் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படி செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை இன்று தொடங்குவதாக நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் அறிவித்தார்.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி நஜிப் செய்த மனுவில், இவ்வழக்கு திட்டமிட்டப்படி நடைபெற்றால், தாம் எதிர்நோக்கும் எஸ் ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கும் ஏககாலத்தில் நடைபெற நேரும் என்றும் இது தமக்கும் தமது வழக்கறிஞர் குழுவிற்கும் நெருக்குதலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் எஸ்ஆர்சி தொடர்பான 42 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேட்டு வழக்கில் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்த்து தற்காப்பு வாதம் புரிவதற்கு நஜிப் தயாராகி வருகிறார்.
அதேவேளையில், ஆகஸ்டு 28ஆம் தேதி தொடங்கவிருக்கும் மற்றொரு 1எம்டிபி வழக்கிற்கும் தாமும் தமது வழக்கறிஞர் குழுவும் தயாராக வேண்டும் என்பதையும் அம்மனுவில் நஜிப் குறிப்பிட்டிருந்தார்.