ஷா ஆலம், நவம்பர் 7:
சிலாங்கூர் மாநில கையிருப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலையில்லாத கொள்கையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி வன்மையாகக் கண்டித்தார். தங்களது அரசியல் சுயநலத்திற்காக இவ்வாறு நடந்துக் கொள்வதாக அவர் சாடினார்.
இதற்கு முன், முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் காலகட்டத்தில் மாநில கையிருப்பை செலவு செய்யாமல் இருக்கும் செயலை கேள்வி எழுப்பியதை நினைவு படுத்தி அமிரூடின் இவ்வாறு பேசினார்.
ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் மாநில கையிருப்பை மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவு செய்யும் செயலை குறைகூறி வருகின்றனர் என அவர் சுங்கை பூரோங் சட்ட மன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டி மாநில சட்ட மன்ற கூட்டத்தில் பேசினார். இவர்களின் நடவடிக்கை நிலையில்லாத கொள்கையை காட்டுகிறது என்றார்.
தற்போது மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை சரிசெய்யவும் மற்றும் குடிநீர் குழாய்களை முழுமையாக மாற்றவும் ரிம 700 மில்லியன் செலவு செய்வதை தவறாக சித்தரிக்கும் நடவடிக்கை ஒரு சந்தர்ப்பவாத செயல் என அவர் தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் காலகட்டத்தில் செய்தது சரியான நடவடிக்கை என கூறுவது அரசியல் ஸ்டண்ட் என்று வர்ணித்தார்.