ஷா ஆலம், டிச.6-
தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. எனினும், பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்திய பின்னரே இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சு தெரிவித்தது.
புதிய கட்டணம் குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் தாம் முழுமையான பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ டாக்டர் ஏ. சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
“தண்ணீர் கட்டணம் கடந்த 20 ஆண்டுகளாக மறுபரிசீலிக்கப் படவில்லை. குடிநீர் விநியோகத்திற்கு இடையூறுகளை விளவிக்கக் கூடிய அம்சங்களைக் குறைப்பதற்கு நிறைய நிதி தேவைப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.
எனினும், இந்த கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சுமையாக இருக்காது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது” என்றார் அவர். மிட்லண்ட்ஸ் தோட்ட தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், புதிய தண்ணீர் கட்டணமானது குடும்ப செலவினத்தில் 2 விழுக்காட்டிற்கு மேல் இருக்காது என்று உறுதி அளித்தார்.