பத்து கேவ்ஸ், டிசம்பர் 15:
பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் பல்லாண்டு காலமாக இழுவையில் இருந்த 27 குடும்பத்தினருக்கு இன்று நிலப் பிரச்சினைகளை மாநில அரசாங்கம் தீர்வு கண்டதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் நெடுங்காலமாக ஆற்றோரமாக வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர் என்றும் தற்போது இவர்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” இந்தியர் கிராம நில விவகாரம் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனை ஆகும். நான் பத்து கேவ்ஸ் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது 2009-இல் தீர்வு காணப்பட வேண்டியது, ஆனாலும் சிலர் ஆற்றோரத்தில் வீடுகளை நிறுவி இருந்ததால் சில தடங்கல் ஏற்பட்டது. மாநில அரசாங்கம் தொடர்ந்து இவர்களுக்கு உதவி புரிந்து வந்தது. ஆண்டவன் புண்ணியத்தில், இன்று இந்த விவகாரம் தீர்த்து வைக்கப் பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் கிராமத்தில் பிரதான சாலை நிறுவப்பட்டு, மக்களுக்கு வசதிகள் செய்யப்படும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.