ஜார்ஜ் டவுன், டிசம்பர் 28:
தேசிய காவல்துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ அப்துல் ஹாமீட் பாடோர் தற்போது மலேசியாவில் இனம் மற்றும் மதம் ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி ஒரு சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சனைகளால் மலேசிய அரச காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது என்றார். காவல்துறை சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முயற்சிகள் எடுத்து வரும் நேரத்தில் பல்வேறு எதிர் பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” காவல்துறைக்கு பெரும் சுமையாக இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளன. இப்படி நடந்திருக்கக் கூடாது. 62 ஆண்டுகள் சுதந்திரத்தை கடந்த பிறகு இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானது கவலைக்கிடமாக உள்ளது. நாடு முன்னோக்கி செல்லும் போது, ஒரு சில தரப்பினர் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது சூழ்நிலையை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. மதம் மற்றும் இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி வரும் தரப்பினர் கொஞ்சம் விவேகமாக சிந்திக்க வேண்டும்.இதனால், சண்டை சச்சரவு ஏற்பட்டால் எல்லோரும் பாதிக்கப்படுவோம். யாரும் இதனால் பயன்பெற போவதில்லை,” என்று ‘காயோஹான் & லாரியான் ரியா’ மெது ஒட்ட 5500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு ஹாமீட் பாடோர் கூறினார்.
காட் ஜாவி சம்பந்தமாக காஜாங்கில் பேரணி நடத்த திட்டமிடப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தடை குறித்து கேள்விகளை எழுப்பி வரும் தரப்பினர் தொடர்பில் காவல்துறை தலைவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
காவல்துறை நீதிமன்றம் சென்று தடையை எடுத்த நடவடிக்கை பாதுகாப்பு கருதியே என்றும் ஆனால் இந்த பேரணி நிறுத்தப்பட்டது குறித்து தாம் கருத்து தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார். காட் ஜாவி பேரணி விடயத்தை தாம் சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ நூர் அஸாம் மற்றும் காஜாங் மாவட்ட காவல்துறை ஆணையர் ஏசிபி அமாட் டஃஸாபீர் முகமட் யூசுப் ஆகியோரிடம் விட்டு விடுவதாக ஹாமீட் பாடோர் தெரிவித்தார்.
#பெர்னாமா