ஷா ஆலம், டிச.18-
அண்மையக் காலமாக இடியுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிள்ளான் துறைமுகத்தின் சுற்று வட்டார சாலைகள் பழுதடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. கிள்ளான் துறைமுகத்தில் உள்ள பூலாவ் இண்டா பாரம்பரிய கிராமத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக அங்குள்ள சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஸமான் ஹுரி கூறினார்.
“இதன் காரணமாக பல சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது” என்று இவ்வட்டார சாலைகளை பொதுப் பணித் துறை மற்றும் ரோட்கேர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் சொன்னார்.
இச்சம்பவங்களுக்கு தண்ணீர் குழாய் பழுது நடவடிக்கை மற்றும் மின்சார இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் சாலைகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் தெனாகா நேஷனல் நிறுவனமும் முறையாக சீர்படுத்தாதும் ஒரு காரணம் என்றும் அவர் சொன்னார்.