புத்ராஜெயா, டிச.10-
2020ஆம் ஆண்டில் குடியிருப்பு பகுதிகளுக்கான மின்சார கட்டணத்தில் மாற்றம் இல்லை. எனினும், குடியிருப்பு அல்லாத பயனீட்டாளர்களிம் மின்சாரக் கட்டணம் அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரையிலும் கிலோவாட் ஒன்றுக்கு 0.55 காசு குறைக்கப்படும் என்று எரிசக்தி ஆணையம் தெரிவித்தது.
அரசாங்கத்தின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவின்படி, மொத்தம் 7.4 மில்லியன் குடியிருப்பு பயனீட்டாளர்களுக்கு மின்சார உபரி கட்டண விலக்கு வழங்கப்படும் என்றும் குடியிருப்பு அல்லாத பயனீட்டாளர்கள் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதன் மூலம் உபரி கட்டணக் குறைவை மின் கட்டண பில்லில் அவர்கள் அனுபவிப்பர் என்றும் ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஐசிபிடி எனப்படும் உபரிக் கட்டண சரிசமமற்ற செலவினத்தின் படி தீபக்கற்ப மலேசியாவின் பயனீட்டாளர்களுக்கு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் வழங்கப்படவிருக்கும் சலுகை காரணமாக 376.45 மில்லியன் ரிங்கிட் விட்டுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.
“குடியிருப்பு பயனீட்டாளர்கள் பிரிவில் 62.95 மில்லியன் ரிங்கிட்டும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை பயனீட்டாளர் பிரிவில் 313.50 மில்லியன் ரிங்கிட் விட்டு கொடுக்கப்பட வேண்டும்” என்று அவ்வறிக்கை விவரித்தது.