ஆயர் கெரோ, டிச.6-
நம்பிக்கை கூட்டணி நிலையாகவும் வலிமையாகவும் இருந்து நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தவும் கூட்டணி கட்சிகளுடன் அணுக்கமாக இருக்கவும் கெஅடிலான் கட்சி ‘ஜிப்ரால்டர் பாறை’ போல் உறுதியாக உயர்ந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அனைத்து நிலையிலும் எடுக்கப்படும் முடிவுகள் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பிரதிபலிப்பதோடு ஆரோக்கியமான நடைமுறையாக இருப்பதையே மக்கள் காண விரும்புகின்றனர் என்று கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.
“”இந்த விவகாரத்தில், கெஅடிலான் முன்னோடியாக இருக்க வேண்டும். நம்மை எவரும் தோற்கடிக்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“மக்களின் கருத்துகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். நாம் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார் அவர்.
இங்குள்ள மலாக்கா அனைத்துலக வணிக மையத்தில் நடைபெற்ற 2019 கெஅடிலான் கட்சி இளைஞர் மற்றும் மகளிர் மாநாடுகளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அஸ்மின் அலி மேற்கண்டவாறு பேசினார்.