ஷா ஆலம், டிச.16-
சிறப்பு நிதி உதவித் தொகையை (பிகேகே) நிர்ணயம் செய்ய, அடைவு நிலை முக்கிய குறியீட்டை (கேபிஐ) அடைய இயலாத பொது சேவை ஊழியர்களுக்கு மாநில அரசாங்க பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இந்நடவடிக்கையானது ஒரு தண்டனை அல்ல, மாறாக பொது சேவை ஊழியர்கள் மேலும் சிறந்த தரமான சேவையை வழங்குவதை ஊக்குவிக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, மாநில அரசாங்கம் சிறப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்வதோடு அவர்களின் செயல்திறனில் மாற்றத்தை ஏற்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அடைவு நிலை குறியீட்டை நோக்கி நடைபோட உதவும்” என்றார் அவர்.
மாநில அரசாங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது , மொத்தம் 105 பொது சேவை ஊழியர்கள் இரண்டு மாத ஊதியத்தை பெறுவர், 21,612 பேர் ஒரு மாத ஊதியத்தையும் எஞ்சியவர்கள் 500 ரிங்கிட்டை பெறுவர் என்று மந்திரி பெசார் அறிவித்தார்.
இந்த பிகேகே திட்டத்தின் கீழ் 22,992 பொது சேவை ஊழியகளுக்கு வரும் டிசம்பர் 24ஆம் தேதி நிதியுதவி வழங்க மாநில அரசு 32.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அவர் சொன்னார்.