கிள்ளான், டிசம்பர் 14:
உலு கிள்ளானில் அமைந்துள்ள ‘ஹைலண்ட் டவர்ஸ்’ பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கை கொஞ்சம் கால எடுக்கும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார். கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு முன் பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.
கடந்த நவம்பர் மாதத்தில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சின் கையகப்படுத்தும் கடிதத்தை மாநில அரசாங்கம் பெற்றதாக அமிரூடின் கூறினார்.
” ஹைலண்ட் டவர்ஸ் பகுதியை மேம்பாடு செய்து மக்கள் வீடமைப்பு திட்டத்திற்கு தயார் செய்ய மத்திய அரசாங்கம் குறிப்பாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சின் ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் மிக அவசியம். ஆனாலும், கையகப்படுத்தும் நடவடிக்கை கொஞ்சம் காலம் எடுக்கும். இதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏறக்குறைய மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் தேவைப்படுகிறது,” என்று அமிரூடின் ஷாரி கிள்ளான் ஜிஎம் மொத்த அங்காடி வளாகத்தில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமிரூடின் ஷாரியுடன், டத்தின் ஸ்ரீ மஸ்டியானா முகமட், மாநில சுற்றுச்சூழல், பசுமை தொழில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான், மாநில ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராமம் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் மற்றும் மாநில பண்பாடு, சுற்றுலா, மலாய் பாரம்பரியம் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.