புத்ராஜெயா, ஜன.10-
அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களாக புரோட்டோன் பெர்டானா நிலைநிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
வாகனங்களுக்கான குத்தகை குறித்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புரோட்டோன் பெர்டானா வாகனங்களின் கையிருப்பு போதிய எண்ணிக்கையில் இல்லாததால், தொயோத்த வெல்ஃபயர் வாகனம் பரிந்துரைக்கப்பட்டது என்று அவர் விவரித்தார்.
“எனினும், பெர்டானா வாகனம் போதுமான எண்ணிக்கை இருப்பதாக உறுதி செய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட காரையே அமைச்சர் மஏற்றும் துணை அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாகனமாக அரசு நிலை நிறுத்தியுள்ளது” என்று அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குவான் எங் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் குத்தகை செயற்குழு முடிவெடுத்த பின்னர் புதிய வாகன குத்தகையைப் பெறும் நிறுவனம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, அமைச்சர் மற்றும் அரசாங்க மூத்த அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ வாகனங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஓர் இணையத்தள செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது.