ஷா ஆலம், ஜன.23-
உலகளவில் கிடைத்து வரும் வரவேற்புக்கு ஏற்ப கைவினை மற்றும் ஒப்பனை பொருட்கள் தயாரிப்புத் துறை மீது சிலாங்கூர் கவனம் செலுத்தும் என்று தொழில்முனைவர் மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கூறினார். மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கலந்துரையாடலின் போது முழுமையான ஒத்துழைப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர்.
“ஆண்டுதோறும் உணவு மற்றும் பானத் தயாரிப்பு துறைகள் மீது கவனம் செலுத்தப்படும் வேளையில், இவ்வாண்டு ஏன் இவ்விரு துறைகள் மீதும் ஏன் கவனம் செலுத்தக் கூடாது? இதர தயாரிப்பு துறைகளைப் போலவே இத்துறைகளும் வளர்ச்சி காண வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.
தனித் தன்மை, கற்பனை ஆற்றல் மற்றும் பூர்வத் தன்மையுடன் கைவினைப் பொருட்கள் திகழ்வதோடு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு சமகால தேவைகளுக்கு ஏற்றவையாகவும் இவை அமைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.
அது போலவே, ஒப்பனை பொருட்களுக்கும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.