செலாயாங், ஜன.24-
செலாயாங் பாரு காலை சந்தைக்கு வருவோரிடம் வசூலிக்கப்படும் வாகன நிறுத்துமிட கட்டணம் தொடர்பில் பொது மக்கள் கொடுத்த புகார் மீது மாநில அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமது தரப்பு விரிவான அறிக்கையைப் பெறுவதோடு இதற்கு விரைவில் தீர்வு காணும் என்றும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.
“அந்த வாகன நிறுத்துமிடத்தை மேம்பாட்டாளர் நிர்வகித்து வருவதாக அறியப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் நான் ஆராய்ந்து வருகிறேன்” என்றார் அமிருடின்.
“எனினும், இவ்விவகாரம் தொடர்பில் நான் அறிக்கையைப் பெறுவதோடு எல்லோரும் பயனடையும் வகையில் இதற்குத் தீர்வு காணும் வழியையும் கண்டறிவேன்” என்று இங்குள்ள செலாயாங் பாரு காலை சந்தையில் சுங்கை துவா சட்டமன்றம் சார்பில் மெண்டரின் பழங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமிருடின் இத்தகவலை வெளியிட்டார்.