புத்ராஜெயா, ஜனவரி 31:
இடைக்கால கல்வி அமைச்சர் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் அறிவியல் மற்றும் கணிதத்தை ஆங்கிலத்தில் போதிக்க அறிவுரைத்துள்ளார். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது கல்வியின் முக்கிய அங்கமாகும் என்றார்.
“புவியியல் மற்றும் வரலாறு பாடங்களை எந்த மொழியிலும் கற்கலாம், ஆனால் அறிவியல் மற்றும் கணிதம், அறிவின் பூர்வீக துறைகள் அல்ல, அது வெளிநாட்டிலிருந்து வருகிறது. இது பெரும்பாலும் ஆங்கிலத்தில் நமக்கு வருகிறது. எனவே, அறிவியல் மற்றும் கணிதம் கற்பிப்பதில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தப் போகிறோம். மலாய் மொழியில் அறிவியலைப் படிப்பவர்கள் ஆங்கிலம் தேவைப்படும் இடத்தில் வேலை செய்ய முடியவில்லை, என்பதை நாங்கள் காண்கிறோம்,” என்று பிிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், புதிய கற்பித்தல் கொள்கை எவ்வாறு அல்லது எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. 2003 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் திட்டத்தை (PPSMI) டாக்டர் மகாதீர் அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்போதைய எதிர்க்கட்சிகளான மக்கள் நீதிக் கட்சி கூட இந்த கொள்கையை வரவேற்கவில்லை.
இத்திட்டம் 2011-இல் முற்றாக அகற்றப்பட்டது. அப்போதைய கல்வி அமைச்சர் முகிதீன் யாசின், இந்த திட்டத்தின் விளைவாக கிராமப்புற மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் குறைந்த தேர்ச்சி பெறுகின்றனர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.