கோலாலம்பூர் , ஜன.24 –
நாடு முழுமையும் கடந்தாண்டு குற்றச் செயல் குறியீடு 7. 5 விழுக்காடு குறைந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார். நாட்டில் குற்றச் செயல்களைக் குறைப்பதில் போலீஸ் படை அடைந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று. அதோடு, மலேசியாவை பாதுகாப்பான நாடாகத் திகழச் செய்வதிலும் இந்நடவடிக்கை துணை புரிந்துள்ளதாகவும் ஹமிட் சொன்னார்.
கடந்தாண்டு குற்றப்புலனாய்வு துறை ஒவ்வொரு 1லட்சம் பேரில் ஒருவர் எனும் அடிப்படையில் 249 குற்றச் செயல்களைக் குறைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதன் உண்மையான இலக்கு 269 ஆகும் என்றார். அதே சமயம், வர்த்தக குற்றப்புலனாய்வு துறை 26,465 பெறப்பட்ட குற்றப்புலனாய்வு அறிக்கைகளில் 21,016
குற்றப்புலனாய்வு அறிக்கைகளுக்குத் தீர்வு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.