கோலாலம்பூர், ஜன.21-
நாட்டின் நீதித்துறை தற்போது இலக்கவியல் மயமாக மட்டும் அல்ல செயற்கை அறிவாற்றலைப் பயன்படுத்தி எளிய முறையில் நீதியை நிலைநிறுத்த முற்பட்டுள்ளது. நீதிமன்ற இலக்கவியல் அமலாக்கத்தில் பல்வேறு செயற்கை ஆற்றலை தற்போது அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியுவ் வுய் கியோங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
‘மின் ஜாமின்’ மற்றும் ‘மின் மறு ஆய்வு’ போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வழக்கறிஞர் மற்றும் அவரது உதவியாளரும் நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை. இதன் வழி காலமும் செலவினமும் சேமிக்கப்படுகிறது. அதோடு நீதிமன்ற செயல்பாட்டு அறிக்கை பதிவு மற்றும் ‘டிஜிட்டலி செக்கியோர்ட் எவிடன்ஸ்’ மூலம் அனைத்து தரப்பினரின் கால மற்றும் நிதி விரயம் தவிர்க்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
2020ஆம் ஆண்டில் மேலும் பல வகைகளில் செயற்கை அறிவாற்றலை அறிமுகப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயலும் என்றும் இந்நடவடிக்கைகள் காரணமாக அனைத்து தரப்பினரும் நீதியை எளிதாகப் பெற முடியும் என்றும் அவர் சொன்னார்.