ஷா ஆலம், ஜன.14-
அதிகரித்து வரும் திடக் கழிவுப் பொருட்கள் பிரச்னை குறித்த விழிப்புணர்வு காரணமாக சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் தெத்ரா பாக் நிறுவனமும் ஊராட்சி மன்றமும் எம்பிஎஸ்ஜே நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 21 மறு சுழற்சி மையங்களைத் திறந்துள்ளன.
இதுவரை 16 மறு சுழற்சி மையங்களை எம்பிஎஸ்ஜே ஏற்பாடு செய்துள்ள வேளை, தெத்ரா பாக் நிறுவனமும் ஊராட்சி மன்றமும் 15 சிற்றறைகளை வழங்கியுள்ளன என்று அதன் தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.
கடந்தாண்டு நாள்தோறும் 684 டன் குப்பைகளை எம்பிஎஸ்ஜே அகற்றியுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.9 கிலோகிராம் குப்பைகள் ஏற்படுத்தியுள்ளன என்றார் அவர்.
“எனவே, அதிகரித்து வரும் குப்பைகளைக் கருத்தில் கொண்டு 21 மறு சூழற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம், பொது மக்கள் தங்கள் குப்பைகளில் இருந்து மறு சுழற்சி செய்யக் கூடிய பொருட்களைத் தனியாகப் பிரிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்” என்றார்.
உதாரணமாக, இந்த சுழற்சி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 15 சிற்றறைகள் காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.