புத்ராஜெயா, ஜன.17-
மக்கள் இ-ரொக்க திட்டம் தொடங்கி 48 மணி நேரத்தில் அரசாங்கம் மொத்தம் 18.8 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
இந்தத் திட்டத்திற்காக 784,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட வேளையில் நேற்றிரவு 10 மணி வரையில் 672,000 விண்ணப்பங்கள் அங்கீகரிப்பட்டதன் இத்திட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது உறுதியாகிறது என்றார் அவர்.
“அனைத்து மக்களும் இந்த அணுகூலத்தை பயன்படுத்திக் கொள்வர் என்று நான் நம்புகிறேன். இது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மக்களுக்கு அளிக்கும் பரிசாகும்” என்று சுங்கை பூலோ –செர்டாங் – புத்ராஜெயா தடத்திற்கான எம் ஆர்டி திட்டத்தின் பங்காளித்துவ உடன்படிக்கையில் எம் ஆர்டி கார்பரேஷன் மற்றும் எம் எம்சி கமூடா ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் குவான் எங் தெரிவித்தார்.
தனிநபர் விபரத் தரவுகள் களவாடப்படுவது குறித்து மக்கள் அச்சம் கொண்டுள்ளது பற்றி அவரிடம் வினவப்பட்டது. எந்தவொரு தரப்பிடமும் இந்த விபரங்கள் அம்பலப்படுத்தப்படாது என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.