ஷா ஆலம், ஜன.16-
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீது கவனம் செலுத்தி யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) அறவாரியத்தின் சிறந்த சேவை இவ்வாண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பை மேலும் நெருங்கும் வகையில் ரியாங் ரியா புத்தக வாசிப்பு திட்டம், கதை சொல்லும் பட்டறை மற்றும் பெற்றோரியல் பட்டறை போன்ற 10 பயிற்சி திட்டங்கள் தொடரப்படும் என்று அதன் தலைமை நிர்வாகி கான் பெய் நேய் கூறினார்.
ரியாங் ரியா புத்தக வாசிப்பு திட்டத்தின் வழி வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொது நூலகங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார் அவர். அதே வேளையில், சிறுவர்களின் மேம்பாட்டில் பெற்றோர் முக்கிய பங்காற்றுவதால் அவர்களுக்கு பெற்றோரியல் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.