NATIONAL

40 ஆண்டுகால புந்தோங் வீட்டு நிலப்பட்டா விவகாரத்தை பாக்காத்தான் அரசாங்கம் தீர்த்து வைத்தது !!!

ஈப்போ, ஜனவரி 21:

புந்தோங் வட்டார மக்களின் 40 ஆண்டு கால  வீட்டு நிலப்பட்டா பிரச்சனையைத் தீர்த்து வைத்து அவர்களுக்கு சொந்த நிலப்பட்டா உரிமம் வழங்கியது பேராக் பாக்காத்தான்  மாநில அரசு. அனைத்து இனங்களுக்கும் சமநீதி நிலவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே அந்தப் பிரச்சனையை தாம் தீர்வு கண்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.

மக்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் நேரடி தலையீட்டின் வழி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது சரித்திரப்பூர்வமான நிகழ்வு என பொது மக்கள் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக 124 பேர்களுக்கு பத்து காஜாவில் பெம்பன் வட்டாரத்தில் நிலப்பட்டா வழங்கப்பட்டு, அதற்கான உரிமத்திற்கான நிலவரியைச் செலுத்துவதற்கான பாரம் 5ஏ நேற்று திங்கட்கிழமை பத்து காஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மந்திரி பெசார் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களாவர்.

பாரங்களைப் பெற்றுக் கொண்ட அனைவரும் உடனடியாக அதனைப் பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்பட்ட நிலவரித் தொகையோடு விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தங்களின் நீண்டகாலப் போராட்டமும் காத்திருப்பும் நல்ல தீர்வோடு ஒரு முடிவுக்கு வந்திருப்பது தங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தருவதாகவும், தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு கண்ட பேராக் மந்திரி பெசாருக்கும் பேராக் மாநில அரசாங்கத்திற்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நிலப்பட்டாக்களைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Pengarang :