கோல சிலாங்கூர், பிப்.17-
`லாமான் ஹாரிஸ்’ வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் கிடைக்கப் பெற்ற குடியேற்றக் காரர்கள் உடனடியாக நிதி கிடைக்கும் என்ற காரணத்திற்காக வீடுகளை விற்க வேண்டாம் என்று நினைவுறுத்தப்பட்டனர்.
கோல சிலாங்கூர் துரித வளர்ச்சி கண்டு வருவதால், இப்பகுதியின் சொத்துடைமைகளின் மதிப்பு உயரும் சாத்தியம் உள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“இந்த வீடுகளை உங்கள் அவசரப் பணத் தேவைகளுக்கான தீர்வாகக் கருத வேண்டாம். துரித வளர்ச்சி கண்டு வரும் கிள்ளான் போன்றே இப்பகுதியும் மேம்பாடு காணும். எனவே உங்கள் வீடுகளை விற்க வேண்டாம்” என்று வீடுகளுக்கான சாவிகள் ஒப்படைப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய உரையில் அமிருடின் அறிவுறுத்தினார்.
“கோலாலம்பூர்- கோல சிலாங்கூர் நெடுஞ்சாலை, கத்ரி கோரிடோர் நெடுஞ்சாலை, டாமன்சாரா-ஷா ஆலம் நெடுஞ்சாலை மற்றும் மேற்கு கரை நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு இப்பகுதியில் இருந்து விரைந்து செல்வதற்கான வசதிகள் இருப்பதால் இப்பகுதி துரித மேம்பாடு காண்பதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்றார் அவர்.
20 ஆண்டுகள் காலமாக காத்திருந்த 987 குடியேற்றக் காரர்களுக்கு ரிம.450,000 மதிப்பிலான 1,750 சதுர அடி நிலப்பரப்பில் இரண்டு மாடிகள் உள்ள வரிசை வீடுகளுக்கான சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த வீடுகளை எகோ வேர்ல்டு மேம்பாட்டு குழும நிறுவனம் நிர்மாணித்தது.