கோலாலம்பூர், பிப்.18-
சுயமாக வருவாய் அறிவிக்கும் சிறப்பு திட்டத்தின் மூலம் வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் ஆகியவற்றின் மூல உள்நாட்டு வருமான வரி வாரியம் மொத்தம் ரிம. 7.88 பில்லியன் வசூலித்துள்ளது. 2018ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் , 286,538 வரி செலுத்துவோரை இந்த வசூலிப்பு நடவடிக்கை உள்ளடக்கியதாக வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் சாபின் சாமிதா கூறினார்.
இத்திட்டம் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக அறிவிப்பு செய்ததன் பயனாக இவ்வாரியம் இந்த வெற்றியைப் பதிவு செய்ய இயன்றதாகவும் இங்கு வழங்கப்படும் சேவைகள் யாவும் மக்களின் விருப்பத் தேர்வாக அமைந்ததாகவும் அவர் சொன்னார். “ஊடகத் துறையுடன் இவ்வாரியம் அணுக்கமான உறவு கொண்டிருப்பதன் காரணமாக முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரிம.8.08 பில்லியனைக் காட்டிலும் 5.89 விழுக்காடு அதிகமாக ரிம 145.11 பில்லியன் வாரியம் வசூலித்தது” என்று அவர் விவரித்தார்.
மீடியா சிலாங்கூர், மீடியா பிரிமா, அஸ்டிரோ அவானி, பெர்னாமா மற்றும் சினார் ஹாரியான் போன்ற ஊடகங்கள் உள்ளிட்ட 200 ஊடக நிறுவனங்கள் வாரியம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.