பத்துகேவ்ஸ், பிப். 21-
செலாயாங் சுற்றுப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 10 லட்சம் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மழைக் காலங்களில் நீரோட்டத்தை எளிதாக்க ஏதுவாக சில வசதிகளின் தரத்தை மேம்படுத்த இந்த ஒதுக்கீடு பயன்படும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.
“வெள்ளத்தினால் மக்கள் படும் அவதிகளை மாநில அரசாங்கம் உணர்ந்துள்ளது. அதே நேரத்தில், தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மேம்பாட்டு அம்சங்களை ஆராயும்படி செலாயாங் நகராண்மைக் கழகத்திடம் நான் பணித்துள்ளேன்” என்று சுங்கை துவா சட்டமன்ற தொகுதி மக்களுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனிடையே, சுங்கை துவா சட்டமன்ற தொகுதியின் சுற்றுப் பகுதிகளை அழகுபடுத்துவதற்காக இப்பகுதியில் நீடித்த மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.