கோல சிலாங்கூர், பிப்.17-
20 ஆண்டு காலமாக காத்திருந்த 987 குடியேற்றக் காரர்களுக்கு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் மாநில அரசாங்கத்தின் முயற்சியால் விடிவு ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்தார்.
“எத்தனை சிரமமான பிரச்னைக்கும் உயர்ந்த லட்சியமும் நோக்கமும் உள்ள அரசாங்கத்தினால் தீர்வு காண முடியும்” என்று அவர் வலியுறுத்தினார்.
“காத்திருப்பு என்பது மிகவும் கொடுமையானது. ஒரு பாடல் வரியில் குறிப்பிட்டுள்ளது போல், காத்திருப்பு என்பது கொடுமையானது ..ஆயினும் பொறுமையோடு காத்திருந்து ஒரு குடும்பமாக முயற்சித்ததால் இன்று சொகுசான வீடு நமக்கு சொந்தமாகியுள்ளது” என்றார்.
“இந்த வெற்றியானது ஒரு காயை உருட்டுவது போன்று எளிமையானது அல்ல. இந்தத் திட்டத்திற்கான அதிகாரத் தரப்பினர் எனக்கு அழுத்தம் தந்தனர். ஊழல் தடுப்பு ஆணையமும் முற்றுகையிட்டது, குடியிருப்பாளர் செயற்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் வாக்குமூலம் அளிக்க அதிகாரிகளுக்கு அழுத்தமும் தரப்பட்டது” என்று எகோ கிரண்டுவரில் நடைபெற்ற சாவி ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் போது அஸ்மின் அலி நினைவுகூர்ந்தார்.
“இதில் மிகவும் சோகமானது, புதிய வீடுகளுக்கான சாவிகளைப் பெறுவதற்கு முன்னரே 373 குடியேற்றக் காரர்கள் மரணமுற்றனர்” என்றார் அவர்.