கோலாலம்பூர், பிப்.20-
சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் ஆற்றலையும் துணிவையும் ஒரு தலைவர் கொண்டிருந்தால், அவருக்கு எவரும் எளிதில் சவால் விட முடியாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார். உயர்தரமிக்க தலைமைத்துவ ஆற்றலையும் எவ்வித சவாலையும் எதிர்கொள்ளும் துணிவையும் தலைவர்கள் கொண்டிருப்பது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.
“ஒரு தலைவரால் சரியான வழியைக் காட்ட முடிந்தால், அவரைப் பின் தொடரும் குழுவின் நடவடிக்கைகளும் சிறப்பாக அமையும். ஓர் உதாரணமாக, ராணுவ படையை எடுத்துக் கொள்வோம். அதன் தளபதி துணிவு, தெளிவு, விவேகமில்லாதவராக இருப்பின் அப்படை ஒரு போதும் வெல்ல முடியாது” என்று அவர் மேற்கோள் காட்டினார்.
“தலைவர் ஒருவர் விவேகமும் திறமையும் கொண்டவராக இருந்தால் அவரது தொண்டர்களும் சிறந்த பயனை அடைவர்” என்று மலேசிய எதிர்கால தலைமைத்துவ பள்ளி திட்டத்தை தொடக்கி அவைத்து ஆற்றிய உரையில் மகாதீர் தெரிவித்தார்.