கோலாலம்பூர், பிப்.19-
இன்று தொடங்கிய 256ஆவது ஆட்சியாளர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றுள்ளதைக் குறிக்கும் வகையில் இஸ்தானா நெகாரா வளாகத்தில் பேரா மாநில ஆட்சியாளர் சுல்தன் நஸ்ரின் ஷா மஞ்சள் செம்பகச் செடி நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவது தடவையாக நடைபெற்ற இந்த செடி நடவு நிகழ்ச்சியானது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா பரிந்துரை செய்த ஒரு நடைமுறையாகும். கடந்த 255ஆவது ஆட்சியாளர் கூட்டத்திற்கு தலைமையேற்ற நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முக்ரிஸ் கடந்தாண்டு மெர்பாவ் மரத்தை நட்டார்.
முன்னதாக, இஸ்தானா நெகாரா, பிரதான சதுக்கத்தில் நடைபெற்ற அரச மலேசிய மலாய் ராணுவத்தின் மரியாதை அணிவகுப்பை சுல்தான் நஸ்ரின் பார்வையிட்டார், மரம் நடவு நிகழ்ச்சி மற்றும் ராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் 16ஆவது பேரரசராக அல் சுல்தான் அப்துல்லா நியமிக்கப்பட்டதற்கு முன்னர் நடைபெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 256ஆவது ஆட்சியாளர் கூட்டத்தில் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராப்புடின் இட் ரிஸ் ஷா, திரெங்கானு ஆட்சியாளர் சுல்தான் மிர்சான் ஜைனல் அபிடின், பெர்லிஸ் ஆட்சியாளர் துவாங்கு சயிட் சிராஜுடிப் , நெகிரி செம்பிலான ஆட்சியாளர் துவாங்கி முக்ரிஸ் மற்றும் கெடா ஆட்சியாளர் சுல்தான் சாலேஹுடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளந்தானைப் பிரதிநிதித்து தெங்கு மக்கோதா டாக்டர் முகமது ஃபாய்ஸ் பெத்ராவும் பகாங்கை பிரதிநிதித்து இடைக்கால பகாங் ராஜா தெங்கு ஹஸானால் இப்ராஹிம் ஆகியோரும் பங்கேற்றனர்.