பத்துமலை, பிப்ரவரி 21:
40 ஆண்டுகால இந்தியன் செட்டல்மெண்ட் நிலப்பட்டா சிக்கலை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தீர்த்து வைத்தது சரித்திரப்பூர்வமான நிகழ்வாகும். 38 இந்திய குடும்பங்கள் நீண்டகாலமாக எதிர் நோக்கிய இந்த சிக்கல் இன்றோடு தீர்வை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியானது மாநில அரசாங்கத்தின் மக்கள் மீது கொண்ட பரிவை காட்டுவது மட்டுமின்றி மக்கள் சொத்துரிமையை அதிகரிக்க செய்ய மேற்கொண்ட நடவடிக்கை ஆகும் என்று அமிருடின் ஷாரி கூறினார். ஆகவே, குறுகிய கால இலாபத்திற்காக இந்த சொத்துக்களை விற்று விட வேண்டாம் என்று மக்களை நினைவுறுத்தினார்.
இந்த புதிய குடியேற்றத்தில் மாநில அரசாங்கம் ரிம 7 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் இவை சாலைகள் மற்றும் கால்வாய் நிர்மாணிக்கும் பணிக்கு செலவிடப்படும் என்றார். அதே நேரத்தில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களின் நல்வாழ்வுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் பயணிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 7-இல் பாக்காத்தான் அரசாங்கம் 2008 தொடங்கி இன்று வரை ஏறக்குறைய 100,000 நிலப்பட்டா சம்பந்தப்பட்ட சிக்கல்களை தீர்த்து வைத்துள்ளதாக சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினருமான அமிருடின் ஷாரி அறிவித்துள்ளது ஒரு மாபெரும் சாதனை ஆகும்.