பத்துகேவ்ஸ், பிப்.21-
40 ஆண்டு கால காத்திருப்புப் பயனாக இந்தியன் செட்டில்மெண்ட் கிராமத்தைச் சேர்ந்த குடிமக்களுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று நில உரிமைப் பத்திரமான 5ஏ அறிக்கையை வழங்கினார். 5ஏ அறிக்கை என்பது சம்பந்தப்பட்ட நிலத்திற்கான தொகையைச் செலுத்திய பின்னர் அந்த நில உரிமையை சம்பந்தப்பட்ட குடியிருப்பாளருக்கு அரசாங்கம் அங்கீகரிக்கும் ஆவணமாகும்.
இந்த அறிக்கையான பல ஆண்டுகளாக காத்திருந்த மக்களுக்கு இவ்வாண்டு கிடைத்த ஒரு மிகப் பெரிய பரிசு என்று குடியிருப்பாளர்களில் ஒருவரான கால்டிப் கவுர் ( வயது 40) கூறினார்.
மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் மாநில அரசாங்கத்திற்கு தாம் மிகவும் கடமைப்பட்டிருப்பதாக கூறிய கல்டிப் கவுர், இங்குள்ளோரின் அலுவல்கள் யாவும் இனி எளிதாக நடைபெறுவதற்கு இந்த அறிக்கை உதவும் என்றார். இதே கருத்தை பகிர்ந்து கொண்ட அமாண்டீப் சிங் ( வயது 27), இந்த நில உரிமைப் பத்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தங்கள் குடும்பம் இழந்த நேரத்தில் இந்த அறிக்கை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்த நிலத்தை விற்க வேண்டாம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறிய அறிவுரையை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார் இந்த் அறிக்கை கிடைக்கப்பெற்ற 38 பேரில் மற்றொருவரான வி. மருதமுத்து ( வயது 54). இத்தனை காலம் காத்திருந்து பெற்ற இந்த நில உரிமை பத்திரமானது மிகுந்த மதிப்புள்ள ஒரு சொத்தாகும் என்றார் அவர்.