ஷா ஆலம், மார்ச் 17-
இங்குள்ள 18 மாவட்ட சுகாதார அலுவலகங்களும் சுகாதார கிளினிக்குகளும் கோவிட்-19 தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்வதாக என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கோல சிலாங்கூர், உலு லங்காட், கோல லங்காட், கிள்ளாம், பெட்டாலிங், கோம்பாக், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம், சிப்பாங் ஆகிய மாவட்டங்களின் சுகாதார அலுவலங்கள் இந்த மருத்துவ பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்றார் அவர்.
“அதே வேளையில், பெஸ்தாரி ஜெயா, பண்டார் துன் ஹூசேன் ஓன், ஜெஞ்சாரோம், கிளானா ஜெயா, சுன்கை பூலோ, செரெண்டா, சிம்பாங் லீமா மற்றும் சாலாக் பகுதிகளில் உள்ள சுகாதார கிளினிக்குகள் இந்நடவடிக்கையில் பங்கேற்கின்றன” என்றார்.
எனவே , இந்தத் தொற்று குறித்த அறிகுறிகளைக் கொண்ட தனிநபர்கள் உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட சுகாதார கிளினிக்குகள் அல்லது அலுவலங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தனது முகநூல் பக்கம் வழி கேட்டுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட கிளினிக்குகள் யாவும் காலை மணி 8 தொடங்கி மாலை மணி 5 வரை செயல்படும் வேளையில் மாவட்ட சுகாதார அலுவலகங்கள் பரிசோதனை மாதிரிகளை தேசிய பொது சுகாதார மன்றத்திடம் ஒப்படைக்கும் என்று அவர் விவரித்தார்.