ஷா ஆலாம், மார்ச் 31-
நடப்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய ஐந்து கடைகள் மற்றும் வர்த்தக சந்தைகள் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தினால் (எம்டிஎஸ்பி) சீல் வைக்கப்பட்டன. அதே வேளையில், கடை மற்றும் சந்தை உரிமையாளர்களுக்கு 29 நினைவுறுத்தல் கடிதங்கள் மற்றும் ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத் தலைவர் முகமது ஃபாய்சுல் முஸ்லி தெரிவித்தார்.
மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது முதல் 114 கடைகள் மற்றும் 71 சந்தைகள் ஆயுதப் படை, போலீஸ் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் ஆகியவற்றின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஃபாய்சுல் குறிப்பிட்டார்.
“வாடிக்கையாளர்களுக்குத் திறந்த வெளியில் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்ததோடு தங்கள் கடைகளில் இவர்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளித்ததன் வழி இந்த வணிகர்கள் அனைவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறினர்” என்றார் அவர்.