புத்ராஜெயா, மார்ச் 26:
பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் கோவிட்-19 நிதிக்கு நன்கொடை அளிக்க இரண்டு மாத சம்பளத்தை குறைத்துக் கொள்கின்றனர்.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கை கோவிட்-19 பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று, அரசு மானியங்கள் உட்பட அந்நிதியால் சேகரிக்கப்பட்ட தொகை RM8,493,103.48 என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
மார்ச் 11 அன்று, பிரதமர் முகிதீன் யாசின் கோவிட்-19 நிதியை RM1 மில்லியன் ஆரம்ப நிதியுதவியுடன் தொடங்கினார். இதை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (Nadma) நிர்வகிக்கின்றது.
14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வேலையின்மையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவும் அந்நிதி பயன்படும் என்று முகிதீன் கூறினார்.
இந்த வெள்ளிக்கிழமை, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக முடங்கிக் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஒரு புதிய தூண்டுதல் தொகுப்பை முகிதீன் அறிவிக்க உள்ளார்