ஷா ஆலம், மார்ச் 14:
கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவோ பயிற்சியில் ஈடுபடவோ கூடாது என்று சிலாங்கூர் விளையாட்டு மன்றம் (எம்எஸ்என்) அனைத்து விளையாட்டாளர்களுக்கும் தடை விதித்துள்ளது.
தொற்று கிருமி பரவல் அச்சமளிக்கும் வகையில் இருப்பதால், வெளிநாட்டு போட்டி பந்தயங்கள் குறித்து மறு ஆய்வு செய்வது அவசியம் என்று மன்றத்தின் நிர்வாக இயக்குநர் அடில் ஃபைசால் அகமது தார்மிசி கூறினார். மாநிலத்தின் விளையாட்டு அமைப்புகளும் விளையாட்டாளர்களும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அதிக அக்கறை செலுத்துவதுடன் தொற்று கிருமி பரவலில் இருந்து விலகியிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கோவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்கும்படி அனைத்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் மலேசிய விளையாட்டு ஆணையம் அலோசனை தெரிவித்தது.