ஷா ஆலாம், ஏப் 6-
சிலாங்கூரில் அதிகமான கோவிட் – 19 சம்பவங்களைக் கொண்ட வட்டாரமாக சிப்பாங் திகழலாம் என்று சிலாங்கூர் கோவிட் – 19 தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்தது. மாநில சுகாதார இலாகாவின் புள்ளி விவரப்படி நேற்று இரவு 11.00 மணி வரை சிப்பாங் வட்டாரம் 39 கோவிட் -19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. சிவப்பு நிற பட்டியலில் இடம் பெறுவதற்கு இன்னும் இரண்டு சம்பவங்கள் மட்டுமே தேவை.
“நான்கு சிவப்பு நிற பகுதிகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து நிலைத்து வருகிறது. 40க்கும் கூடுதலான எண்ணிக்கையைக் கொண்ட வட்டாரங்கள் சிவப்பு நிற பகுதிகளாக வகை பிரிக்கப்படும்.
இதுவரை இம்மாநிலத்தில் 4 வட்டாரங்கள் சிவப்பு நிற பகுதிகளாக வகை பிரிக்கப்பட்டுள்ளன.
உலு லங்காட்(312 சம்பவங்கள்), பெட்டாலிங் (286 சம்பவங்கள்), கிள்ளான் (101 சம்பவங்கள்) மற்றும் கோம்பாக் (95 சம்பவங்கள்) ஆகியவையே அவை. இதன் பொருட்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி சிப்பாங் வட்டார மக்களை அக்குழு கேட்டுக் கொண்டது.