ஷா ஆலம், ஏப்ரல் 9:
உலு சிலாங்கூரில் 47 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஆறாவது சிவப்பு பகுதியாக அறிவிக்கப் பட்டது என்று சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் நெருக்கடி நடவடிக்கை மற்றும் தயார்நிலை மையம் தெரிவித்துள்ளது. உலு சிலாங்கூரை தவிர்த்து ஏற்கனவே உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் செப்பாங் மாவட்டங்கள் ஆபத்தான அல்லது சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 59 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் உலு லங்காட் பகுதியிலே ஏற்பட்டுள்ளது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,125 கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அதில் உலு லங்காட் (373), பெட்டாலிங் (325), கிள்ளான் (144), கோம்பாக் (119), செப்பாங் (49), உலு சிலாங்கூர் (47), கோலா சிலாங்கூர் (27), கோலா லங்காட் (25) மற்றும் சபாக் பெர்னாம் (16) என சுகாதார இலாகாவின் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். மொத்தம் 8 இறப்புகள் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.