ஷா ஆலம், ஏப்.2-
சிலாங்கூர் அரசாங்கம் நேற்று வெளியிட்ட பரிவுமிக்க பொருளாதார நல திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் கீழ் கூடுதலாக ரிம.30,000 ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இரண்டாவது தடவையாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் ஒதுக்கீட்டு தொகை காரணமாக கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் அதிகமானோருக்கு மக்கள் பிரதிநிதிகள் உதவிகள் வழங்க இயலும் என்று கிள்ளான் துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜாமான் ஹுரி கூறினார்.
தினக் கூலிக்கு வேலை செய்யும் பலரும் சிறு வர்த்தகளும் தற்போது வருமானத்தை இழந்துள்ளதால், உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது என்றார் அவர். மக்களுக்கு உதவும் பணி சீராக நடைபெறுவதற்கு இந்தக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாக உள்ளது என்று கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் முகமது நாஜ்வான் தெரிவித்தார்.
இது போன்ற சிரமமான சூழ்நிலையில் இந்த உதவியை உடனடியாக செய்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். இதனிடையே இந்த ஒதுக்கீட்டை வரவேற்ற எதிர்க்கட்சி தலைவர் ரிஸாம் இஸ்மாயில், அனைத்து மக்களும் இதன் வழி பயனடைவதை உறுதி செய்ய மாநில அரசு நடைமுறை ஒன்றை வெளியிட வேண்டும் என்றார்.