புத்ராஜெயா , ஏப்.7-
தலைநகர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலாயன் மேன்ஷன் ஆகிய இரு கட்டடங்களிலும் இன்று முதல் கடுமைையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிடி) பிறப்பித்துள்ளதாக மூத்த தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இவ்விரு கட்டடங்களிலும் 15 கோவிட்-19 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இங்கு நடமாடும் கட்டுபாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதனை அடுத்து இங்குள்ள 365 குடியிருப்புகளில் குடியிருக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நடமாட்டங்களும் வணிக நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த பிரகடணத்தைத் தொடர்ந்து அங்குள்ளோர் அமைதி காப்பதோடு சுகாதார அமைச்சின் அதிகாரிகளிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நடைமுறைகளையும் அவர்கள் பின்பற்றுவதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் வரை குடியிருப்பாளர்கள் எவரும் வெளியே செல்லவும் வெளியாட்கள் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்படுவர்.
இக்கட்டட வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அத்தியாவசிய பொருள் விற்பனையைத் தவிர்த்து இதர வர்த்தக நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ள வேளையில், உணவு பொருட்களுக்கான ஆர்டர்களைச் செய்யவும் அவற்றை குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவர்.