ஷா ஆலம், ஏப்ரல் 10:
டாக்டர் அமாட் ஃபாஸ்லி அமாட் தாஜுடின் கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) புதிய தலைவராக நேற்று தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொது நிர்வாக கல்லூரியின் நிர்வாக மேம்பாடு மற்றும் புத்தாக்கப் பிரிவின் தலைவராக பணியாற்றிய அவர் கடந்த நவம்பர் 2019 பணி மாற்றம் செய்யப்பட்ட டத்தோ முகமட் யாஸிட் பீடினுக்கு பதிலாக பணியமர்த்தப் பட்டார் என்று தி ஸ்தார் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று தனது அதிகாரப்பூர்வ வருகையின் போது நகராண்மை கழக உறுப்பினர்கள் மற்றும் எம்பிகேவின் இஸ்லாமிய பணியாளர்கள் நலன் அமைப்பின் அங்கத்தினர்களுக்கும் முகமூடி மற்றும் அத்தியாவசிய பொருட்களை டேவான் ஹாம்ஸாவில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமாட் ஃபாஸ்லி எம்பிகேவின் தலைமை அதிகாரிகளை சந்தித்து கோவிட்-19 தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொண்டார். நோய் தாக்கத்தை எதிர் கொள்ள நகராண்மை கழகத்தின் பங்கு மிக முக்கியமானது என்றும் அந்த சந்திப்பில் கூறினார்.