ஷா ஆலம், ஏப்.8-
நடமாட்ட கட்டுப்பாடு ஆணையைப் பின் பற்ற மறுத்து வரும் மாநிலத்தில் உள்ள 7 முதல் 8 விழுக்காட்டினர் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவேனும் இந்தப் பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவுறுத்தினார். அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை மாநிலத்தைச் சேர்ந்த பொது மக்களில் 92 முதல் 93 விழுக்காட்டினர் பின்பற்றுவதாக அரச மலேசிய காவல் துறை அறிவித்துள்ளது குறித்து மந்திரி பெசார் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
“முன் வரிசை பணியாளர்களை குறிப்பாக ராணுவம் மற்றும் போலீஸ்காரர்களை நேற்று நான் சந்தித்த போது. ஆணையை பின் பற்ற மறுக்கும் சிலர் கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருப்பதை கண்ணுற்றேன்” என்றார் அவர்.
“ஆணையைப் பின் பற்ற மறுப்பவர்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்குவதை உணர வேண்டும்” என்றார். இந்த சில சம்பவங்கள் தவிர்த்து அமலில் உள்ள இரண்டாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு நடவடிக்கைக்கு மக்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு மன நிறைவளிக்கும் வகையில் இருப்பதாக அவர் சொன்னார்.