பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 2:
நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) நடவடிக்கையை மேலும் கடுமையாக்க காவல்துறை உறுதி செய்யும் என்று புக்கிட் அமான் பொது அமைதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ எஸ்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். பொது மக்கள் பிகேபியை 100% பின்பற்றுவதை புக்கிட் அமான் நடைமுறைகளை மேலும் கெடுபிடியாக கையாளும் என அவர் கூறினார். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களில் ஒரு தரப்பினர் பிகேபியை கடைபிடிக்க தவறியதே ஆகும் என்றார்.
இன்றோடு 16-வது நாளாக பிகேபி அமல்படுத்தப்பட்டு வந்தாலும் பொது மக்கள் இன்னும் தங்களுக்கு தெரியாது என்ற சாக்குபோக்கு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
” இரவு 11 மணிக்கு ரொட்டி, குடிநீர் மற்றும் சிகரெட் வாங்க செல்வதாக கூறும் பொது மக்களின் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. இதற்கு முன்பாக காவல்துறை எல்லா கடைகளும் இரவு 8 மணிக்கு மூடப்படும் என்றும் இரவு 10 மணிக்கு மேல் யாரும் வீட்டிற்கு வெளியே செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்க அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் பிகேபி நடவடிக்கையை பொது மக்கள் செவிசாய்க்க வேண்டும். பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் ,” என்று நள்ளிரவு எஸ்ரில் சானி பிஜேஎஸ்2 தோல் சாவடியில் நடைபெற்ற சாலை தடுப்பு சோதனையின் போது செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.