பத்து கேவ்ஸ், ஏப்ரல் 4:
நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி, பொது மக்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய மாநகராட்சி மன்ற உறுப்பினர் அதை மதிக்காமல் செயல்பட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் (எம்பிஎஸ்ஏ) உறுப்பினரும் மற்றும் அவரின் மூன்று சகாக்களும் பிகேபி காலகட்டத்தில், மாநகராட்சியின் கீழ் உள்ள மண்டபத்தில் பூப்பந்து விளையாடிய சம்பவத்தை மேற்கோள்காட்டி அமிருடின் ஷாரி இவ்வாறு கூறியிருக்கிறார்.
” இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினரின் நடவடிக்கையை கண்டு நான் மிகவும் ஏமாற்றம் அடைகிறேன். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறோம். அவர் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருந்திருக்க வேண்டும்,” என்று மக்கள் செயற்குழு அலுவலகத்திற்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதற்கு முன்பாக மேற்கண்ட மாநகராட்சி மன்ற உறுப்பினரின் நடவடிக்கையை சமூக வலைதளங்களில் பொது மக்கள் கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், பலர் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.