கோலா லம்பூர், ஏப்ரல் 30:
நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) மீறிய குற்றவாளிகளின் பெயர்கள் காவல்துறை கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படாது என தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமீட் பாடோர் இன்று தெரிவித்தார். பெர்னாமா தொடர்பு கொண்ட போது மலேசிய காவல்துறை குற்றவியல் பட்டியலில் பிகேபி குற்றவாளிகள் பெயர்கள் இடம் பெறாது என்று அவர் உறுதி அளித்தார்.
” பிகேபி குற்றவாளிகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்,” என்று பிகேபி குற்றவாளிகள் கருப்பு பட்டியலிடப் படுவார்களா என பெர்னாமா செய்தியாளர் கேள்விக்கு குறுஞ்செய்தியில் இவ்வாறு ஹாமீட் பாடோர் பதில் அளித்தார். கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றாலும் பொது மக்கள் இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு கோவிட்-19 நோய் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பிகேபியை பின்பற்றாமல் இருக்கக்கூடாது. பிகேபி நடவடிக்கையை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான தண்டனை மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று நினைவு படுத்தினார்.