ஷா ஆலம், ஜூன் 4:
கம்போங் சுங்கை பூலோ, செக்சன் யூ4 பகுதியில் அந்நிய நாட்டவர்கள் நடத்தி வந்த இரண்டு கடைகள் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறியதன் காரணமாக ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது என்று எம்பிஎஸ்ஏவின் தொழில்முறை மற்றும் பொது உறவு பிரிவின் தலைவர் ஷாரின் அமாட் தெரிவித்தார். இந்த அதிரடி நடவடிக்கையில் எம்பிஎஸ்ஏவின் சுங்கை பூலோ கிளை அலுவலகம், சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படை ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
” 11 வணிக வளாகங்கள் சோதனை செய்யப் பட்டது. இதில் இரண்டு கடைகள் வெளிநாட்டவர்கள் வழி நடத்தி வருபவை ஆகும். இரண்டு கடைகளின் உரிமையாளர்களும் சோதனை நடத்தப்படும் போது அவ்விடத்தில் இல்லை,” என்று ஷாரின் அமாட் தமது அறிக்கையில் அவர் கூறினார்.
மேற்கண்ட நடவடிக்கையின் வழி மொத்தம் ஒன்பது அபராத நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது. நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் கோவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்கும் முயற்சிகளை மாநகராட்சி மன்றம் எடுத்து வரும் நேரத்தில் வணிக உரிமையாளர் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் நினைவு படுத்தினார்.