NATIONAL

67.2% பணியாளர்கள் தங்களது வேலைகளுக்கு திரும்பி உள்ளனர் – நிதியமைச்சர்

புத்ராஜெயா, ஜூன் 3:
மே 17 ஆம் தேதி வரையில், 67.2 விழுக்காடு அதாவது ஒரு கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். முன்னதாக, கடந்த மே 10ஆம் தேதி, 43.6 விழுக்காட்டினர் அதாவது 66 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணியைத் தொடங்கியிருந்ததாக நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்த எண்ணிக்கை, சேவை, விவசாயம், உற்பத்தி போன்ற பொருளாதாரத் துறையைச் சார்ந்து வீட்டிலிருந்து வேலைச் செய்பவர்களையும் உட்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். செவ்வாய்க்கிழமை பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் குறித்த ஏழாவது அறிக்கையை முகநூல் வாயிலாக வெளியிட்டபோது பேசிய அவர், 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், வேலையின்மை விகிதம் 3.5 விழுக்காடாக இருப்பதாகக் கூறினார்.

கொவிட்-19 நோய் தாக்கத்தினால், உலகமெங்கும் வேலையின்மை விழுக்காடு வழக்கத்திற்கும் அதிகமாக பதிவாகி இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார். ஆகவே, இக்காலக்கட்டத்தில், தொழிலாளர்களும், மக்களும் எதிர்நோக்கும் சவால்களை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :