மலாக்கா, ஜூலை 12:
உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நலன் அமைச்சு (கெபிடிஎன்கெஎச்இபி) எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையை கிலோவிற்கு ரிம 9 கீழ் நாடு முழுவதும் விற்பனை செய்ய உத்தேசித்துள்ளது என துணை அமைச்சர் டத்தோ ரோசுல் வாஹீட் தெரிவித்தார். மேற்கண்ட உத்தரவாதத்தை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் அமைச்சிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் கோழி இறைச்சி விலை கிடுகிடு உயர்வு கண்டுள்ளதை மேற்கோள்காட்டி ரோசுல் வாஹீட் இவ்வாறு விளக்கினார்.
அண்மையில் கெபிடிஎன்கெஎச்இபி மேற்கொண்ட ஆய்வில் சில கோழி இறைச்சி வணிகர்கள் ஒரு கிலோவிற்கு ரிம 8.20-இல் இருந்து ரிம 8.60 வரை விற்று வருவதாக அவர் கூறினார். மலாக்கா சரித்திர மாநகராட்சி மன்ற பொதுச் சந்தையில் பொருட்களின் விலைகளை கண்காணிக்க களத்தில் இறங்கிய போது செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு முன் திரெங்கானு மாநிலத்தில் ஒரு கிலோவிற்கு கோழி இறைச்சி ரிம 10.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.