புத்ராஜெயா, ஜூலை 7:
சீரான செயலாக்க நடைமுறைகளைப் பின்பற்றி புதிய விதிமுறைகளுடன் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு பிகேபி அமலாக்கம் தொடர்பான அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி திரவங்களை தயார் செய்து வைத்திருப்பது மற்றும் நாடாளுமன்ற அமர்வின் போது ஒரு மீட்டர் தொடுகை இடைவெளியில் கடைப்பிடிப்பது உட்பட நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊடகவியளாலர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு முன்னதாக மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்திருப்பதோடு, உடல் உஷ்ண பரிசோதனையையும் மேற்கொண்டிருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே மக்களவையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஊடகவியளாலர்களும் அரசாங்க ஊழியர்களும் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
ஜுலை 13-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27 வரை, 25 நாட்களுக்கு மக்களவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 23- ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு மேலவை கூட்டம் நடைபெறும்.
– பெர்னாமா